
அந்த ரயில் பெட்டியில் உன்னைத்தவிர நிறைய பேர்.
நெருக்கியடித்தபடி, நின்று கொண்டும், சீட் நுனிகளில் ஒட்டிக் கொண்டும்...
ஹும்..! இம்முறையும்...
வழக்கமான புளிமூட்டைப் பயணம்தான்.
அமர்ந்திருந்த அதிர்ஷ்டசாலிகளில் ஜன்னலோரம் இருந்த ஓரு 30 வயது போன்ற மகனும், அவனது வயதானத் தந்தையும்...
சூழலுக்கும், உனக்கும், பிறருக்கும் எரிச்சலூட்டிக் கொண்டிருந்தார்கள்.
காரணம் அந்த மகனுடைய சிறுபிள்ளைத்தனப் பேத்த்ல்களாய் இருக்கலாம்.
வெகு நேரமாய் ஒரு சின்னஞ்சிறு பாலகனைப் போல ஜன்னல்வழியே காணாது கண்ட காட்சிகளைப் பார்த்தவனாய் பிதற்றிக் கொண்டிருந்தான்.
"அப்பா! அப்பா! அங்கே பாரேன்..! எவ்ளோ பச்சைப் பச்சையா... மரம்.., செடிகொடி.., மலை... எல்லாமே... எவ்ளோ வேகமா பின்னால ஓடுது பாரேன்."
உனக்கு வந்தக் கோபத்தை அடக்கிக் கொண்டாய்.
ஆளைப் பார்த்தால் 30 வயசு. பேச்சென்னவோ 5 வயசு. ஒருவேளை மூளை கலங்கியவனோ? பைத்தியமோ?
உன்னைப் போலவே.., அங்கிருந்த இன்னும் சிலரும் சற்று ஜாக்கிரதையாய் இருக்க வேணுமென்று எண்ணியிருக்கலாம்.
திடீரென்று...
சடசடவென்று மழை பிடித்துக் கொண்டது.
திறந்திருந்த ஜன்னல் வழியே...
உள்ளிருக்கும் அத்தனைப் பயணிகள் மேலும்...
மழை புளிச் புளிச்சென்று வயதான கிழவி வெற்றிலை எச்சில் துப்புவதைப் போல சாரலடித்தது.
அந்த மகனுக்கு சந்தோஷம் பீறியது.
"அப்பா... அப்பா..! மழை பெய்யற அழகைப் பாரேன். அற்புதமாயில்ல..?"
உனக்கோ உன் புது உடை நாசமாகும் ஆத்திரம்.
உன் சார்பாக இன்னொருவர் கத்தினார்.
"ஏன்யா கெழவா..! உன் பையனுக்கு புத்தி சுவாதீனமில்லைன்னா, எங்கயாவது பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போ..! அதுக்கு ஏன் இப்படி ஓடற ரயில்ல கூட்டிட்டு வந்து எங்களைக் கழுத்தறுக்கற...
அய்ங்"
அந்த வயதான தந்தை சற்றே தயக்கத்துடன், கசிந்த கண்களுடன் கையெடுத்துக் கும்பிட்டபடி தழதழத்த குரலில் பதிலளித்தார்ர்.
"சிரமத்துக்கு மன்னிச்சுடுங்கோ..!, நாங்க ஆஸ்பத்திரில இருந்துதான் வரோம். என் பையன் காலைலதான் டிஸ்சார்ஜ் ஆனான்.
அவனுக்குப் பிறவியிலயே கண்ணு தெரியாமப் போயி..,
36 வருஷத்துக்கப்புறம் போன வாரம்தான்.., பார்வை கிடைச்சுது.
இந்த இயற்கையும்..., மழையும்.., அவனுக்குப் புதுசு."
----------------------------------------------------------------
வருத்தமுடன் ஒரு குறிப்பு:
சில சமயம் நமது செயல்கள் நமது பார்வையில் முற்றிலும் சரியானவையாகத் தோன்றலாம். ஆனால்.................
உண்மை தெரிய வரும்போது... நமது செயல் நம்மையே கன்னத்திலறைந்து கொள்வதற்குப் போதுமான வலியை உருவாக்கலாம்.
எனவே...
கடுமையாய் நடந்து கொள்ளுமுன்...
பிரச்சினையின் உண்மைத்தன்மையை முழுமையாய் அறிந்து கொள்ள முயற்சி செய்வோம்.
சந்தோஷமுடன் ஒரு சிறு குறிப்பு:
இணையத்தில் நுழைந்த பின்பான என் (!!!) முதல் சிறு(!)கதை :-)
கதைக்கான கருவும், களமும் " இங்கிருந்து"சுடப்பட்டது. என் விருப்பம் போல கதை சொல்லும் பாணியை மாற்றியிருக்கிறேன். ஒப்பிட்டு கருத்து சொல்லவும்.


