GIVE & RECEIVE FULL

Custom Search for Positive Anthony Muthu
Custom Search

Friday, August 1, 2008

என் கால்களை எறும்புகள் தின்ற காட்சி..!

அன்பர்கள் மனம் வலிக்கக் கூடாதென்கிற காரணத்தால்... புகைப்படங்களை வேறிடம் மாற்றியுள்ளேன்.
கட்டாயம் பார்க்க விரும்பினால் இங்கே "க்ளிக்" செய்யவும்!


சில நாட்களுக்கு முன்னால் உணர்வில்லாத என் கால்களை எறும்புகள் தின்ற வேளையில்,
என் நண்பரின் டிஜிட்டல் கேமரா மூலம் எடுத்தக் காட்சி அது.

இது இரக்கத்தைச் சம்பாதிக்க எழுதப் படவில்லை.

என் நிலை இதுதான் என்று அனைவரோடும் பகிர்ந்து இதிலும் ஒரு நல்ல விஷயம் இருக்கிறதென்பதை புரிய வைக்கும் சிறு முயற்சி.

கழுத்துக்கு கீழ் இரு கைகளைத்தவிர எதுவுமே இயங்காத நிலை மட்டுமல்ல.

கால்களிலும் வயிற்றிலும் கத்தி பாய்ந்தாலும் என்னால் உணர முடியாது.

(எனக்கு வலிக்காது)

உடலின் இயங்கும் பகுதிகள் தவிர மற்றவற்றை..
கண்களால் பார்த்தோ..
(அ) கைகளால் தொட்டோதான் உணரமுடியும்.

இதை ஒரு விதத்தில் நான் நல்லதாகவே நினைக்கிறேன்.

ஏனென்றால் என் முதுகிலும், உட்காருமிடத்திலும், இருக்கின்ற,
உள்ளங்கையை விட அகலமான,
படுக்கைப் புண்களின் வலி மட்டும் எனக்கு உணர முடிந்திருந்தால் எப்படியெல்லாம் துடித்திருப்பேன்.

(ஒரு வருடம் முன்பு, வயதான அக்காவினால், என்னைச் சுத்தமாகப் பராமரிக்க முடியாத காரணத்தால்..,

அந்தப் புண்களிலிருந்து, மாதுளை விதை அளவு, புழுக்கள்,
ஆம்... புழுக்களேதான், எண்ணிக்கை இல்லாமல் வெளி வந்து,
பின் சில நல் மனமுடைய கன்னியாஸ்திரிகள்..
மருந்து அனுப்பி வைக்க,
புழுக்கள் நிறுத்தப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக குணமாகிக் கொண்டு வந்து,
இன்னமும் முழுமையாக,
அந்தப் புண்கள் ஆறவில்லை.)

ஆக இந்த உணர்வில்லாத நிலை, எனக்கு அந்தப் புண்களின் வலியை உணராதிருக்க உதவியிருக்கிறது.

அட...! இதிலும் இப்படி ஒரு நன்மை இருக்கிறதே என்று சந்தோஷம் கொள்கிறேன்.

24 வருடங்களுக்கு முன், சிகச்சைக்காக நான் மருத்துவமனையில் இருந்த போதிலிருந்தே எறும்புகள், என் கால்களின் தசையைத் தின்னுவது வாடிக்கை.(எனக்கு வலிக்காது)

அவை என்னிடம் வராதிருக்க, ப்ளாஸ்டிக் மூடிகளில் நீர் நிரப்பி கட்டிலின் நான்கு கால்களுக்குக் கீழே வைப்பார்கள்.

என் படுக்கையைச் சுற்றி எறும்பு சாக்பீஸினால் கோடு கிழித்து வைப்பார்கள்.

ஆனால் இதையெல்லாம் கடந்து எங்கேனும் கவனமில்லாமல் தொங்கி, தரையைத் தொட்டுக் கொண்டிருக்கும் ஒரு துணியின் வழி போதாதா என் எறும்பு நண்பர்கள் என்னிடம் வந்து போக.

கால்களில் உணர்வில்லை எனினும்..., வயதுக்குரிய வளர்ச்சி இல்லைதான் எனினும்...,
சூம்பிப் போகவில்லை.

முடியும், நகமும் சாதாரணமாய், வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

கால்களில் நகம் வெட்டுகையில் ப்ளேடு கிழித்து ரத்தம் வழியும். (எனக்கு வலிக்காது)

எறும்புகள் மேல் தோலைத் தின்னுகையில், சிராய்த்தாற்போலிருக்கும் காயம்...,

எப்போதாவது...

அவை இன்னும் ஆழமாக உண்ணத் துவங்கினால், ரத்தம் வழிந்து விரல்களுக்கிடையே கொழ கொழப்பாகத் தேங்கிக், காய்ந்து...
விரல்கள் ஒன்றோடொன்றாய் ஒட்டிக்கொள்ளும்.

துணி மூடியிருக்கும் என் கால்களை ரகசியமாய் எறும்புகள் தின்ன பல நாள் தெரிந்தே அனுமதித்திருக்கிறேன்.

(எனக்கு வலிக்காது)

கொச கொசவென்று கால்களை மூடியிருக்கும் எறும்புகளிடம் பல நாள் பேசிக் கொண்டிருந்தும் இருக்கிறேன்.

"உங்களுக்கு சாப்பிட வேறு இடம் கிடைக்கவில்லையா?"

"இன்னும் கொஞ்ச நேரத்தில் அக்காவோ அல்லது வேறு யாரோ வந்து நீங்கள் புறப்பட்டு வரும் கோட்டைப் பார்த்தால் தேய்த்துக் கொன்று விடுவார்களே."

"நீங்கள் சாவதற்கென்றே புறப்பட்டு வந்தீர்களா.?"

"சரி! சரி! சீக்கிரம் சாப்பிட்டுவிட்டுப் புறப்படுங்கள்."
சொல்லிவிட்டு என் வேலயைப் பார்ப்பேன்.

(முன்பெல்லாம் ரேடியோ ரிப்பேரிங், புத்தகம் படிப்பது, என் கீபோர்டில் இசைப்பயிற்சி. இப்போது கம்ப்யூட்டர்)

எறும்புகளைத் தேய்க்க வருபர்களிடம் அவற்றைக் கொல்ல வேண்டாம் என்று கெஞ்சுவேன்.

என் கெஞ்சல் தாங்க முடியாமல், பெரும்பாலும், கால்களைத் தட்டி உதிர்த்துவிட்டு, துடைப்பத்தினால் பெருக்கித் தள்ளி விட்டு மீண்டும் சாக்பீஸ் கோடு போடுவார்கள்.

சில போதுகளில் பொறுமை இன்றி தேய்த்துக் கொன்று விடுவார்கள்.

(ஆரம்ப காலங்களில் நானும் அவற்றைத் தேய்த்துக் கொன்று கொண்டுதான் இருந்தேன். சுமார் 10 வருடங்களாய்த்தான் இந்த ஞானோதயம்.)

இப்போது அந்த எறும்புகளிடம் எவருமே காணாத, நான் மட்டுமே கண்ட அதிசயமான உண்மையைச் சொல்ல்கிறேன்.

எறும்புகளினால் உண்டான காயத்தை ஆற்ற இது நாள் வரையிலும், நான் எந்த மருந்துமே இட்டதில்லை.

எவ்வளவுதான் ரத்தம் வரக் கடித்தாலும் அந்தக் காயங்கள் ஆற அதிகபட்சம் 2 முதல் 4 நான்கு நாட்கள்தான்.

ஆச்சரியமாய் ஆறிப் போய் விடும்.

கடித்துச் சாப்பிட்டுவிட்டு அந்த்க் காயம் ஆறிப் போவதற்கான மருந்தையும் எறும்புகளே இட்டுச் செல்கின்றன என்பது என் கணிப்பு..

(எதிர்காலத்தில் ஏதேனும் ஆராய்ச்சிக் குழு இதை நிரூபிக்கக் கூடும்.)


இப்போது...

அடுக்கடுக்காய் கேள்வி கேட்க நினைப்பவர்களுக்கு...

அடிக்கடி என் மனதிற்குள் எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளையே பதிலாகத் தருகிறேன்.

எறும்பு கடிப்பதால் எனக்கு....
எள்ளளவும் நஷ்டம் கிடையாது.

முதலாவது...

எனக்குத் துளி கூட வலி தெரியாது.

இரண்டாவது...

அவற்றினால் எனக்கு ஏற்படும் காயங்களுக்கு அவையே மருந்திடுவதாக நினைக்கும் என் நம்பிக்கை உண்மையோ இல்லையோ?

சில நாட்களில் அவை ஆறிவிடுகின்றன என்பது நிஜத்துக்கும் நிஜமான நிஜம்.

ஆக, எனக்கு வலியோ, நஷ்டமோ இல்லாத ஒரு விஷயத்துக்காக நான் ஏன், அந்த அப்பாவி எறும்புகளைக் கொல்ல வேண்டும்.

கைகளில் உணர்விருக்கும் இடத்தில் கடிக்க அனுமதித்ததில்லை.
அப்படிக் கடிக்கும் எறும்பைக் கைகளில்,
பூப்போல எடுத்து...
உதட்டருகில் கொண்டு போய், ஏதாவது பேசிவிட்டு,
கொஞ்சமாய் எக்கி,
என் படுக்கையைத் தாண்டி, பாதுகாப்பான தூரத்தில், விட்டு விடுவேன்.

அட...! என்னைப் பைத்தியக்காரன் என்றுதான் வைத்துக் கொள்ளுங்களேன்.

உணர்வுள்ள இடத்தில் கடிக்கும் கொசுவை,
அடித்துக் கொல்கிறேன்.

ஏனென்றால் அவற்றினால் வலியும், மலேரியாவும் வரும். குணப்படுத்த மருந்திட வேண்டும்.

எறும்புகளினால் வலியும் இல்லை.
மருந்திடவும் வேண்டாம்.

எறும்புகள் என் கால்களைத் தின்ன அனுமதிக்க இன்னொரு காரணமும் உண்டு.

பொதுவாக எனக்குள்..,
"என்னால் எவருக்கும் எந்தப் பிரயோசனமும் இல்லை.
நான் வாங்குவதற்கென்றே பிறந்தவன்", என்கிற ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு.

தாகம் தணிக்கும், தண்ணீருக்குக் கூட பிறரை எதிர்நோக்கியிருப்பது கூட ஒரு விதத்தில், வாங்குவதுதானே?

மூச்சு விடுவது, உண்பது, அதை ஜீரணமாக்குவது....

இவற்றைத் தவிர மற்ற அனைத்திற்கும், நான் பிறரிடம் கணக்கின்றி வாங்கிக் கொண்டுதானே இருக்கிறேன்.

வாங்கிப் பார்த்தவர்களால் மட்டுமே, வாங்குவதில் உள்ள வார்த்தைகளுக்கெட்டாத, சுயமரியாதையின் வலியை உணர முடியும்.

இந்த வலியை ஒருநாள் இருநாள் அல்ல..,

25 வருடமாக அனுபவிக்கிறேன்.

எப்போது நான் இவற்றை திருப்பித் தருவேன்?

எப்போது நானும் கொடுக்கும் நிலைக்கு உயர்வேன், என்று பல இரவுகளில், கதறி அழுதிருக்கிறேன்.

இனி வரும் வரிகளை, நீங்கள் உச்சபட்ச பைத்தியக்காரத்தனமாகவே கொண்டாலும் பரவாயில்லை..!

மனிதர்களுக்கு உபயோகமில்லாத நான்...

மனிதர்களிடம் பெறுகிற நிலையிலிருக்கும் நான்...

மனிதர்களுக்குக் கொடுத்து திருப்தி அடைய முடியாத நான்....

குறைந்தபட்சம்...

இந்த எறும்புகளுக்காவது, உபயோகமாய் இருந்து விட்டுப் போகிறேன்.

இந்த எறும்புகளுக்காவது...
கொடுப்பதனால் எனக்கு எதுவுமே குறைவுபடாத...
உணர்வற்ற என் உடலின் ஒரு சிறு பகுதியை...
கொடுத்துவிட்டுப் போகிறேனே.

{ஆப்பிரிக்கக் காடுகளில் விஷ எறும்புகள் என்று ஒரு வகை இருக்கிறதாம்.
கடித்தால் பரலோகம் நிச்சயமாம்.
அவை கடித்தாலும் சந்தோஷமே.
அட... வாங்குகின்ற வலி முடிந்து போகும். :-))
(சும்மா... தமாசுங்க!)

:-)).. }

இவை விரக்தியின், எதிர்மறைச் (NEGATIVE THOUGHTS) சிந்தனைகளின் வெளிப்பாடல்ல.

வாழ்வு பற்றிய மனம் நிறைந்த கனவுகளோடும்...,

எதிர்காலம் குறித்த அசைக்க முடியாத நம்பிக்கைகளோடும்...,

நாளை அனைத்தும் நலமாகும் என்கிற,

எதிர்பார்ப்போடும்...,

என் நாட்களை நகர்த்துகிறேன்.

ஆனாலும்....

விளைவு எதுவாயினும்...

ஏற்க,

என் மனக்கதவை விசாலமாகத்
திறந்து வைத்திருக்கிறேன்.

சரி! என்னை எறும்பு கடிப்பது கிடக்கட்டும்.

இவ்வளவு நேரமும் என் கடியைத்
தாங்கினீர்களே...!!!

நிச்சயமாய்...
நீங்கள் ஞானிதான்.

:-))

14 comments:

சரவணகுமரன் said...

:-(

உங்களுக்கு வலிக்காமல் இருக்கலாம்... ஆனால் இதை படிக்கும் எவருக்கும் வலிக்கும்..

ஜோசப் பால்ராஜ் said...

வலிக்குதுங்க.
உங்களோட தன்னம்பிக்கை எனக்கு ரொம்ப பிடிச்ச ஒன்னு. ஆனா இந்த பதிவு என்னை அழ வைத்தது. உங்களுக்காக பிரார்திக்கின்றேன். உங்களுக்கு உதவ எனக்கும் ஆசை தான் தயவு செய்து எனக்கு மடல் அனுப்புங்கள். joseph.paulraj@gmail.com

+Ve அந்தோணி முத்து said...

சரவணகுமரன் said...

//:-(

உங்களுக்கு வலிக்காமல் இருக்கலாம்... ஆனால் இதை படிக்கும் எவருக்கும் வலிக்கும்..//

கடவுளே! எவருக்கும் வலி ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் நான் எழுதவில்லை சரவணகுமார்.

என்னுடைய அனுபவத்தில்,
அதில் உள்ள நல்ல Positive விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.

வலி ஏற்படுத்தியதற்கு மன்னியுங்கள்.

+Ve அந்தோணி முத்து said...

ஜோசப் பால்ராஜ் said...

//வலிக்குதுங்க.
உங்களோட தன்னம்பிக்கை எனக்கு ரொம்ப பிடிச்ச ஒன்னு. ஆனா இந்த பதிவு என்னை அழ வைத்தது. உங்களுக்காக பிரார்திக்கின்றேன். உங்களுக்கு உதவ எனக்கும் ஆசை தான் தயவு செய்து எனக்கு மடல் அனுப்புங்கள்.//

மிக்க நன்றி சகோதரரே.

உங்களது பிரார்த்தனைகள் எனக்கு ஆயிரம் யானைகளின் பலத்தைக் கொடுக்கும்.

சுரேகா.. said...

படித்துவிட்டு மனதில் பட்டதைப் பதிந்துவிட்டேன்.
பாருங்கள்

http://surekaa.blogspot.com/2008/08/blog-post.html

Aruna said...

//எப்போது நானும் கொடுக்கும் நிலைக்கு உயர்வேன், என்று பல இரவுகளில், கதறி அழுதிருக்கிறேன்.//

இந்தப் பதிவு மனதை ரணமாக்குகிறது அந்தோணி......கவலைப் படாதீர்கள்..எல்லோருக்கும் கொடுக்கும் காலம் விரைவில்...வரும்....கொடுக்க வேண்டும் என்ற ..இந்த மனம் ஒன்றே போதாதா? வாழ்வை இனிமையாக்குவதற்கு???
அன்புடன் அருணா

Chandravathanaa said...

மனதைக் கலக்கி விட்டீர்கள் அந்தோனி முத்து.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

அந்தோனி முத்து, உங்களது எழுத்துக்களே சாட்சி நீ்ங்கள் வாழ்க்கையை ஜெயித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று. அதற்குரிய மனபலம் என்றும் உங்களுக்கு இருக்க வேண்டும்.

மதுவதனன் மௌ.

புதுகை.அப்துல்லா said...

எனக்கு ஒன்றும் சொல்லத் தோன முடியாத நிலையில் இருக்கிறேன். அந்தோணி முத்து எனக்கு நீங்க மெயில் அனுப்புங்க.pudukkottaiabdulla@gmail.com.

Anonymous said...

மனசுக்கு வருத்தமா இருக்குங்க படிச்சதும். இது மாதிரியெல்லாம் கேக்கும் போதுதான் கடவுள் மேல கோபமும், கடவுள்னு ஒருத்தர் இல்லியோன்னும் தோணும். மன உறுதி உங்களுக்கு நிறைய இருக்கு. என்னிக்கும் இருக்கணும்

வடுவூர் குமார் said...

சற்று முன் முடிந்த பதிவர் சந்திப்பு கூட்டத்தில் உங்களைப்பற்றியும் பேசினோம்.
நண்பர் ஜோசப்பால்ராஜ் சொன்னார்.

Anonymous said...

Searching for words.... to explain my feelings.

You are indeed a teacher...

- Gita Ram

ராமலக்ஷ்மி said...

//நிச்சயமாய்...
நீங்கள் ஞானிதான்.//


அன்றாட வாழ்வில் வரும் உடல் நலக் குறைவுகளுக்கு இனி ஒரு போதும் சோர்ந்திடத் தோன்றாது இதைப் படித்தால்..என்னையும் சேர்த்துத்தான். அதை எங்களுக்கு உணர்த்திய வகையில் யார் ஞானி எனக் கூறவும் வேண்டுமா?

நிச்சயமாய்
ஞானி
நீங்கள்தான்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

உண்மையில் உங்கள் தந்தையின் பதிவை காணவே இங்கு வந்தேன். ஆனால் உங்களின் இந்தப் பதிவு என் மனதை என்னவோ செய்கிறது.

சில நாட்களுக்கு முன் திருவண்ணாமலை சென்றிருந்த போது, பாதாளலிங்கத்தின் அருகே ரமண மகரிஷியைப்பற்றிய வாழ்க்கை வரலாற்றை சிறுகுறிப்பாக எழுதியிருந்தார்கள். அதில் ஒரு வரியிருந்தது: அது : தவத்தில் ஈடுபட்டிருந்த திரு. ரமணமகரிஷியின் உடலை புழு, பூச்சிகள் தின்று கொண்டிருந்ததாகவும், அதனைக் கேள்விப்பட்ட சேஷாத்ரி மகரிஷி அவரை காப்பாற்றியதாகவும்.
அதை கற்பனை செய்து விட்டு நான் மனம் வருத்தப்பட்டேன்.

உங்களின் பதிவை படித்த பின்பு, போட்டோவை பார்த்தபின்பு என்னால் எழுதக்கூட முடியவில்லை. உங்களின் இந்த தன்னம்பிக்கை என் போன்றோருக்கு
ஒரு பாடம். இப்போது எப்படி இருக்கிறீர்கள். மேலும் எழுதுங்கள்.

உங்களின் நல்வாழ்வுக்கு என் ப்ரார்த்தனைகள்

Infolinks In Text Ads

LinkWithin

Related Posts with Thumbnails

Karnaa Full Video

Title:கர்ணன் karnan (திரைப்படம்) (Tamil film...

Desc:

Download here

எனக்குப் பிடித்த என் எழுத்துக்கள்....

A Letter to God...!



Oh my dear God!
I wrote a letter to you on 8' th-Dec.2007.

I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.

You had fulfilled, "All of my Essential 3 needs,

"1) Online Job (With a Salary of 3000 Rs.)

2) New Laptop.

3) Powered wheel Chair.

I thank with tears in my eyes, to all of the Human forms that which you took in disguise, to participate in helping me to get my Needs.

PLEASE MAKE ME POWERFUL.

PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.

PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.

Thank you Soooo MMMuchhh.

Your's Same Faithfully & Especially Beloved Son

Anthony Muthu.