
அப்துல் கலாம் எனும் இமய மலையோடு, அந்தோணி முத்து எனும் சிறு கூழாங்கல்... பல சமயம் கற்பனையில் மானசீகமாக பேசி ஆறுதலடைந்திருக்கிறது.
பல சமயம் இந்த Fantasy-யில் மூழ்கி என் கவலைகளை மூழ்கடித்திருக்கிறேன்.

அவரை என் தாய் மாமாவாக நினைத்து அளவளாவுவேன்.
(எனக்குத் தெரிந்து பிள்ளைகள் மேல் பெற்றவர்களுக்கு அடுத்தபடியாக, தாய் மாமாக்கள்தான் அதிக அன்பு செலுத்துவதாய் நம்புகிறேன்.)
சில சமயம் அப்துல் கலாமுடன், சில சமயம் புராண கால கர்ணனுடன். (கர்ணன் என் நண்பனாக்கும்.)
அப்படிப்பட்ட Fantasy- க்களில் சமீபமாய் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியது இது.
-------------------------------------------
"என்ன நீள மூக்குப் பையா?? என்ன ஆழ்ந்த சிந்தனை?
(அப்படி அழைப்பது எனக்கு மிகப் பிடிக்குமென்று அவருக்குத் தெரியும்)
"ம்ம்ம்... வாங்க மாமா! வாங்க..! அந்த முக்காலிய எடுத்துப் போட்டு உக்காருங்க"
"உக்காந்தாச்சு..! சொல்லு!"
"என்ன?"
"அதான் என்ன ஆழ்ந்த சிந்தனைன்னு கேட்டேனே..?"
"மாமா.!"
"சொல்லு பையா!"
"கனவு காணுங்கள் - ன்னு நீங்க அடிக்கடி சொல்லுவீங்களே..?"
ஆமாம்..! அது ஒரு மிகச் சக்தி மிக்க ஒரு வாக்கியம்.
இன்றைக்கு சாதித்திருப்பவர்களின் சாதனைகள் எல்லாமே, அவர்கள் வாழ்வில், அது குறித்து தெரிந்தோ தெரியாமலோ கனவு கண்டவைதாம். கற்பனை செய்தவைதாம்..!
நான் சொல்லும் கனவு தூக்கத்தில் நீ காண்பது பற்றி அல்ல.
உன்னைத் தூங்க விடாமல் செய்து கொண்டிருக்கும் உன் எதிர்காலம் குறித்த கனவு. சொல்லு!
"அது போலவே, என் கனவுகளும் நிகழுமா மாமா..?"
"உதை படப் போகிறாய். நேர்மறை சிந்தனைகளின் கிரியா ஊக்கி, பாஸிட்டிவ் அந்தோணி முத்து- ன்னுல்லாம் பேர் வச்சிட்டு, உனக்குப் போய் இப்படிப்பட்ட சந்தேகங்கள் வரலாமா பையா? என்னாச்சு உனக்கு..?"
"மன்னிச்சுடுங்க மாமா..? சாதாரண மனிதப் பிறவிகளுக்கே உரிய மனத்திண்மையின் பலவீனம் எனக்கும் உண்டு மாமா.!"
"சந்தேகப்படாதே..! உன் கனவின் வலிமை குறித்து துளியும் சந்தேகம் வேண்டாம்! நம்பு..! உன் கனவின் வலிமையை பூரணமாய் நம்பு.
உன் கனவின் மீதான உன் விருப்பத்தையும், தேவையயும் பொறுத்து...
உன் கனவின் ஆழத்தைப் பொறுத்து, கனவை மனதிற்குள் ரிப்பீட் செய்வதைப் பொறுத்து.... விரைவாகவோ (அ) மெதுவாகவோ, ஆனால் சர்வ நிச்சயமாக உன் கனவு நிகழ்ந்தே தீரும்."
"ரொம்ப நன்றி மாமா..!"
"ஆமாம். என்ன நீயும் என்னை மாதிரியே ஹேர் ஸ்டைல் வச்சிருக்க. ரொம்பத்தான் காப்பியடிக்கறே..! சரி. முறைக்காதே..! உன் கனவுகளைப் பற்றிச் சொல்லேன் கேட்போம்..!"
---------------------------------
(அடுத்த பதிவில் அந்தோணி முத்து-வின் கனவுகளைப் பற்றி பேசலாமா..?)
----------------------------------
"நன்றி: "
பின் குறிப்பு. 1: பின்னூட்டம் கட்டாயமில்லை.
பின் குறிப்பு. 2: பதிவு உபயோகமாயிருப்பின் மேலே தமிழ்மணக் கருவிப்பட்டையிலும், கீழே தமிழிஷிலும் க்ளிக்கி ஓட்டளிக்கவும்.
"பி. கு. 2: அழகுத் தமிழை எளிதாய்த் தட்டச்ச உதவும் "அகிலப் புகழ் அழகிக்கு..." "(இப்போது முற்றிலும் இலவசம்)"
நன்றி..!
நன்றி..!
நன்றி..!"