
"விண்ணும் மண்ணும் தனியாளும் - எங்கள்
வீரை சக்தி நினதருளே - என்றன்
கண்ணும் கருத்துமெனக்கொண்டு - அன்பு
கசிந்து கசிந்து கசிந்துருகி - நான்
பண்ணும் பூசனை களெல்லாம் - வெறும்
பாலை வனத்திலிட்ட நீரோ; - உனக்
கெண்ணூஞ் சிந்தை யொன்றிலையோ? அழி
விலாத் தகிலம் அளிப்பாயே?"
"நீயே சரணமென்று கூவி - என்றன்
நெஞ்சிற் பேருறுதி கொண்டு - அடி
தாயே! எனக்கு மிக நிதியும் - அறந்
தன்னைக் காக்கு மொருதிறனும் - அருள்
வாயே என்றுபணித் தேத்திப் - பல
வாறா நினது புகழ்பாடி- வாய்
ஓயே னாவதுண ராயோ?- நின
துண்மை தவறுவதோர் அழகோ?"
"காளீ வலியசா முண்டி - ஓங்
காரத் தலைவியென் இராணி - பல
நாளிங் கெனையலைக்க லாமோ; - உளம்
நாடும் பொருளடைதற் கன்றோ? - நின்
தாளில் விழுந்தபயங் கேட்டேன் - அது
தாராய்- யெனிலுயிரைத் தீராய் - துன்பம்
நீளில் உயிர்த்தரிக்க மாட்டேன் கரு
நீலியென் இயல்பறி யாயோ"
"தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?"
"நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் யாவும்- இன்னும்
மூளா தொழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்....!"
(-மகாகவி பாரதியார்)
1 comment:
மகாகவியின் வைர வரிகளை இங்கு காணக் கொடுத்தமைக்கு நன்றி!
Post a Comment