
ஒரு முறை பாண்டவர்கள், தங்களில் மூத்தவரான தருமரையும் அவரது கொடைத் தன்மையையும், சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.
கிருஷ்ணரும் உடனிருந்தார். அவர் அமைதியாகச் சொன்னார்.
"தருமரை விட கர்ணனே கொடுப்பதில் சிறந்தவன்!" என்றார்.
"என்மேல் வருத்தப் பட வேண்டாம்.... நாளை நிரூபிக்கிறேன்!" என்றார்.
பொழுது விடிந்தது.
"என்னுடன் வாருங்கள்!" என்று பாண்டவர்களை உடனழைத்துச் சென்று...
இரண்டு தங்க மலைகளை உருவாக்கினார்.
பாண்டவர்களிடம் ஒரு மலையை ஒப்படைத்து...
"இன்று சூரியாஸ்தமனத்துக்குள் இந்த மலையை நீங்கள் முழுவதுமாக தானமளித்து விட வேண்டும்!" என்றார்."
"ப்பூ... இவ்வளவுதானா..?" என்று அனைவரும் சேர்ந்து சுற்றிலுமுள்ள கிராமங்களுக்கு ஆளனுப்பி... அனைவரையும் வரச்செய்து...
அத்தனை பேருக்கும் சுமக்க முடியாத அளவு தங்கத்தை வெட்டி வெட்டி... கொடுக்கத் துவங்கினார்கள்.
போவோர், வருவோர் என் எவருக்கும் பாகு பாடின்றி... கூப்பிட்டு கூப்பிட்டு...
தங்க மலையை வெட்டிக் கொடுக்கின்றனர்.
பொழுதும் சாய்கிறது.
மலை கால்வாசிகூட கரைந்த பாடில்லை.
பொழுது சாய இன்னும் சில நிமிடங்களே பாக்கி.
தருமர் சோர்ந்து போய்ச் சொன்னார்.
"கிருஷ்ணா... தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்.
எங்களால் ஒரு மலையில் கால்வாசிகூட கொடுக்க முடியவில்லை."
அதுவரை அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணர்...
அங்கு வந்த கர்னனை அழைத்துச் சொன்னார்.
"கர்ணா..! இந்த இரண்டு தங்க மலைகளையும்,
பொழுது சாயவிருக்கும் இந்தச் சில நிமிடங்களில் உன்னால் எவருக்காவது கொடுக்க முடியுமா?"
"அதற்கென்ன கிருஷ்ணா!" என்று சொல்லி மலைகளின் அருகில் சென்றான் கர்ணன்.
காலை முதல் மாலை வரை ஓய்வின்றிக் கொடுத்தே கால் வாசிதான கொடுக்க முடிந்திருக்கிறது.
இவன் எப்படி சில நிமிடங்களில் தரப்போகிறான் என அனைவரும் நம்பிக்கையின்றி பார்த்துக்கொண்டிருக்க... நேரம் நகர்கிறது.
இன்னும் சூரியாஸ்தனமத்துக்கு ஒரே ஒரு நிமிடம்தான் மீதியிருக்கிது.
அந்த வழியாய் வந்த வழிபோக்கனை கர்ணன் கைதட்டி அழைத்தான்.
"இந்தா! இந்த இரண்டு மலைகளையும்... நீயே வைத்துக் கொள்!" என்று கொடுத்து விட்டுத் தன் அரண்மனை நோக்கிச் சென்றான்.
சூரியன் மறைந்தது.
கிருஷ்ணர் பாண்டவர்களைப் பார்த்துப் புன்னகைத்தார்.
4 comments:
மிக்க நன்றி. திரு. அந்தோணி முத்து. பின்னூட்டத்துடன் நிற்காமல் என் வலைபூபுக்கு இணைப்பும் கொடுத்துள்ளீர்களே தங்களின் இந்த ஊக்குவிப்புக்கு எனது மனமார்ந்த நன்றிகள். வலைப்பூ எழுத்தில் சோர்ந்த சமயத்தில் வந்த சரியான ஊக்குவிப்பு தங்களுடையது. நன்றி.
//கிருஷ்ணர் பாண்டவர்களைப் பார்த்துப் புன்னகைத்தார்.//
ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த புன்னகை.
படித்த கதைதான்...மீண்டும் படிக்கக் கிடைத்தது...
அன்புடன் அருணா
//Aruna said...
படித்த கதைதான்...மீண்டும் படிக்கக் கிடைத்தது...
அன்புடன் அருணா
//
ரிப்பீட்டே :))
Post a Comment